முக்கிய செய்திகள்

பயங்கரவாத தாக்குதலில் 6 வீரர்கள் பலி

By Unknown - Monday, May 23, 2016 No Comments

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் இந்தியா-மியான்மர் எல்லைப் பகுதி அருகே தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 6 அசாம் ரைபில்ஸ் படை வீரர்கள்  பலியாயினர். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர், முன்பு பர்மா என்றழைக்கப்பட்ட மியான்மர் அருகே உள்ளது. இங்குள்ள பழங்குடி மக்கள்  வசிக்கும் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டுவிட்டு, பாதுகாப்பு வீரர்கள் நேற்று காலை திரும்பி கொண்டிருந்தனர். அப்போது  சாந்தல் என்ற இடத்தில், மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென வாகனத்தை வழிமறித்து தாக்குதல் நடத்தினர்.

இதில் நிலைகுலைந்த பாதுகாப்புப் படையினர், சுதாரித்துக் கொண்டு பதிலடி கொடுத்தனர். இருந்தும் தாக்குதலில் 6 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த  தாக்குதலில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தீவிரவாத குழுக்கள் இடம் பெற்றிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தாக்குதல் நடத்தப்பட்ட இடத்துக்கு  அருகே காவல் நிலையம் உள்ளது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், வீரர்களிடமிருந்து துப்பாக்கி உள்பட ஆயுதங்களை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.  இதுவரை எந்த  அமைப்பும் இந்த சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்கவில்லை.

இந்நிலையில், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அசாம் ரைபில்ஸ் படைப் பிரிவின்  இயக்குனர் தாக்குதல் குறித்த தகவல்களை தெரிவித்தார்.

Tags:

No Comment to " பயங்கரவாத தாக்குதலில் 6 வீரர்கள் பலி "